அனைத்து கோப்புகளையும் தமிழில் எழுத வேண்டும்- கலெக்டர் சிவராசு!
திருச்சி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இதில் 2020-ம் ஆண்டுக்கான அரசு அலுவலகங்களில் தமிழில் சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய அரசுப்பணியாளர்களுக்கு பரிசையும்,
சிறந்த மாவட்ட நிலை அலுவலகமாக தேர்வு செய்யப்பட்ட லால்குடி கல்வி மாவட்ட அலுவலகத்திற்கு கேடயத்தையும் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு வழங்கி பேசுகையில், தமிழ் மொழிக்கு என்று இயற்கையாகவே சில சிறப்புகள் உண்டு. தமிழ் மொழி மற்ற எல்லா மொழிகளைக் காட்டிலும் மிக எளிமையானது. மிகச்சிறந்த இலக்கணத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மொழி தமிழ் மொழி. இன்றைக்கு ஆங்கிலத்தை பெருமையாக நினைப்பவர்கள் இதை கண்டிப்பாக உணர வேண்டும். இணையத்தில் அடியெடுத்து வைத்த முதல் இந்திய மொழி தமிழ்
மொழியாகும். தமிழ் ஆட்சிமொழி என்பது நிர்வாக மொழியாகும். நிர்வாகத்தில் மக்களுக்கு தெரிந்த மொழியாக இருப்பதற்கு வழிவகை செய்வதாகும். தமிழில் எழுத வேண்டும் ஆட்சிமொழி செயலாக்கம் என்பது நிர்வாகத்தில் கையொப்பம், பதிவேடுகள், பயண நிரல், நாட்குறிப்பு, கடிதங்கள், முத்திரைகள், பட்டியல்கள், தட்டச்சுப்பொறிகள், கோப்புகள், கணினிகள் போன்றவற்றில் தமிழில் எழுதவும், பராமரிக்கவும், அலுவலக கோப்புகளை அனைவரும் தமிழில் எழுத வேண்டும். தமிழ்ஆட்சி மொழிச்சட்டத்தின்படி
கோப்புகள், கடித போக்குவரத்துகள் பிறமொழிக் கலப்பின்றி முழுமையும் தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என்றார். இதில் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குனர் கா.பொ.ராசேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு உதவி இயக்குனர் செந்தில்குமார், தமிழ்நாடு மின் தொடரமைப்புக்கழக (உதவி நிர்வாக அலுவலர்) சே.அ.பாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.