ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீதம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் திட்டம் – ஆட்சியர் தகவல்!
திருச்சி மாவட்டத்தில் 2021- 2022ம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்த புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சம் ஒரு லட்சம் வரை வங்கிக்கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீத அரசு மானியம் அதிகபட்சம் 50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் சாதி சான்று, இருப்பிடச் சான்று இணைக்கவேண்டும். விண்ணப்பதாரர் சிறு குறு விவசாயி என்பதற்கான சான்றினை வட்டாட்சியரிடமிருந்து பெறவேண்டும். நில உடமை ஆதாரமாக கணினி வழி பட்டா மற்றும் அடங்கல் நகல் இணைக்க வேண்டும். விவசாயிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.