குட்கா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு திருச்சி நீதிமன்றம் வழங்கிய நூதன தண்டனை!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதிகளில் குட்கா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் திருவெரும்பூர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ரவிக்குமார் என்பவரது டீக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் மதிப்புள்ள ஐந்து குட்கா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் காட்டூரில் உள்ள காளியம்மாள் என்பவருக்கு சொந்தமான பெட்டிக் கடையில் சோதனை நடத்தியதில் 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 40 குட்கா பண்டல்களை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் இதுகுறித்து ரவிக்குமார் காளியம்மாள் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்த போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை நிபந்தனை ஜாமினில் விடுவித்த நீதிபதி நூதனமாக தண்டனை வழங்கினார். இருவரும் 20 நாட்களுக்கு தினந்தோறும் காவல் நிலையத்தை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தல் வேண்டும் மேலும் பறவைகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என்ற இரண்டு நிபந்தனைகளை விதித்து அவர்களை ஜாமீனில் விடுவித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று முதல் அவர்கள் இருவரும் காவல் நிலையத்தை சுத்தம் செய்தனர். மேலும் அங்குள்ள பறவைகளுக்கு உணவு அளித்தனர்