மணிப்பூர் கலவரம் மூலம் ஆதாயம் பெற பா.ஜ.க. முயற்சி : முத்தரசன் குற்றச்சாட்டு
திருச்சி, ஜூலை 24 மணிப்பூர் கலவரம் மூலம் ஆதாயம் பெற பா.ஜ.க. முயற்சிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டினார். திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு குஜராத்தில் கலவரம் செய்து ஆதாயம் பெற்று ருசி கண்ட பூனை போல், மணிப்பூரில் கலவரம் செய்து ஆதாயம் பெற முயற்சிக்கிறது. நாடு முழுவதும் அந்த முயற்சியை பா.ஜ.க செய்யும். சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் தரும் இடமாக பா.ஜ.க இருக்கிறது. அந்த கட்சியில் இருக்கும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுத்தாலே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கிற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தில் இரண்டு ஜாதிகளை மோதவிட்டு அரசன் பார்ப்பார் அதே போல தான் மணிப்பூரில் இரண்டு சமூகங்களை மோத விட்டு பிரதமர் நரேந்திர மோடி வேடிக்கை பார்க்கிறார் என்று கூறினார்.