மணப்பாறையில் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிய வழிப்பறி கொள்ளையர்களை மடக்கிப்பிடிக்கும் சிசிடிவி காட்சிகள்

0 561
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை தெற்கு லெட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி கோமளாதேவி (வயது 28). இவர் இன்று மாலை விராலிமலை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் தனது 4 வயது மகனை பள்ளி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு நடந்து அழைத்துச் சென்று கொண்டிருந்தார். மாரியம்மன் கோவில் திருமண மண்டபம் எதிரே நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென கோமளாதேவியின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால் கொள்ளையர்களிடம் கோமளாதேவி தாலி செயினை பறிக்க விடாமல் போராடிய நிலையில் கொள்ளையர்கள் செயினை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பமுயன்றனர். இதனைபார்த்து அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஓருவர் சாலையில் குறுக்கே வண்டியை நிறுத்தியபோது வண்டியின் பின்புற வழியாக தப்ப முயன்றனர். அப்போது அவ்வழியாக வந்த செல்லையா என்ற ஆட்டோ டிரைவர் இதனை பார்த்து விட்டு உடனே ஆட்டோவில் மறிக்க முயன்ற போது கொள்ளையர்கள் ஆட்டோவில் மோதி கீழே விழுந்தனர். இதைப்பார்த்த பொதுமக்கள் உடனே கொள்ளையர்கள் இருவரையும் பிடிக்க முயன்ற போது ஒருவர் தப்பிச் சென்றார். மற்றொருவரை பிடித்து அவரின் கையை கயிற்றால் கட்டி வைத்தனர். மேலும் பிடிபட்ட கொள்ளையனுக்கு முகத்தில் காயமும் ஏற்பட்டது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிடிபட்ட கொள்ளையனை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் நாகை மாவட்டம், காடம்பாடி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த விஜய்
(வயது 28) என்பதும் தப்பியோடியவர் திருச்சி எட்டரைகோப்பு பகுதியைச் சேர்ந்த நவீன் வயது 28 என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடியவரை போலீசார் தேடி வருவதோடு பிடிபட்ட கொள்ளையனிடம் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியையும் அவர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். செயினை பறிக்கமுயன்ற போது நடந்த போராட்டத்தால் கோமளாதேவியின் கழுத்தில் காயம் ஏற்பட்டதால் அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
மணப்பாறை பகுதியில் தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் போக்குவரத்து நிறைந்த பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்ப முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கொள்ளையர்களை பொதுமக்கள் பிடித்து கொடுத்துள்ள நிலையில் பிடிபட்டவருக்கு மற்ற வழிப்பறி சம்பவங்களில் தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தில் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவை குறுக்கே நிறுத்தி கொள்ளையர்களை மடக்கிப்பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் அங்கு ஓருகடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் ஆட்டாவில் மோதும் காட்சிகள் கீழே விழுந்து தப்பியோட முயன்ற கொள்ளையன் ஒருவரை துரத்திப்பிடிக்கும் காட்சி. மற்றொரு கொள்ளையன் தப்பியோடும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
கொள்ளையர்களை தப்ப விடாமல் சமயோசிதமாக செயல்பட்டு ஆட்டோவை குறுக்கே நிறுத்தி கொள்ளையர்களை பிடிக்க காரணமாக இருந்த ஆட்டோ ஓட்டுனர் செல்லையாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.