தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
திருச்சி, ஏப்.24 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் லால்குடி கிளை சார்பில் உலக புத்தக தினம், தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் (என்.எம்.எம்.எஸ்) வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பயிற்சி ஆசிரியர்களுக்கும், டிரஸ்ட் தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்ற மாணவிக்கும் பாராட்டு விழா நடைபெற்றது
இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியரும்,லால்குடி கிளைத் தலைவருமான க.திருமாவளவன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் த.ரூல்டாப் நான்சி அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்டச் செயலாளர் மு.மணிகண்டன் உலக புத்தக தின உரை நிகழ்த்தி, பாராட்டுரை வழங்கினார். மாவட்ட இணைச் செயலாளரும், அறிவியல் வெளியீடு உபகுழு மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான க.பகுத்தறிவன் அறிவியல் பாடல் பாடி, கணித செயல்பாடுகள் செய்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
என்.எம்.எம்.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களான எஸ்.கே.அஸ்விகா, இ.தாரேஷ், எஸ்.சாதனா, ப.இஸ்பா சாய்ரா ஆகியோரையும், பயிற்சி ஆசிரியர்களான மு.குமார், ஜோ.மேரி கிறிஸ்டினா, து.செல்வி, தி.கீதா ஆகியோரையும் பாராட்டி புத்தகம் வழங்கப்பட்டது.