டோல் பிளாசா ஊழியருடன் தே.மு.தி.க. நிர்வாகி வாக்குவாதம்
திருச்சி, மார்ச் 11 தேனி மாவட்டம் பெரியகுளம் தேமுதிக நகரச் செயலாளர் வையம்பட்டி டோல் பிளாசாவில் இலவச அனுமதி கேட்டு ஊழியருடன் வாக்குவாதம்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் மகன் யுவராஜ் 33. இவர் தேனி மாவட்டம் பெரியகுளம் தேமுதிக நகரச் செயலாளராக உள்ளார். நேற்று அவரது நண்பர்களுடன் காரில் திருச்சியில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த போது வையம்பட்டி டோல் பிளாசாவில் அவரது காருக்கு இலவச அனுமதி வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு டோல் பிளாசா ஊழியரான வையம்பட்டி கருங்குளத்தைச் சேர்ந்த மரிய பிரான்சிஸ் – (41) என்பவர் இலவச அனுமதி தர முடியாது என கூறியுள்ளார்.
இதை அடுத்து யுவராஜ் காரை வேகமாக ஓட்டி செக்போஸ்ட்டை இடித்துவிட்டு வேகமாக செல்ல முயன்ற நிலையில் மரிய பிரான்சிஸ் மற்றும் யுவராஜ் ஆகிய இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இருவரும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.