திருச்சி கே.கே.நகரை அடுத்த கே.சாத்தனூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியின் வடக்கு கரையின் சரிவில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான யோக அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தொல்லியல்துறையில் ஓய்வு பெற்ற ஸ்தபதி வே.ராமன் கூறுகையில், 1,000 ஆண்டு பழமையான இந்த அய்யனார் சிலையை முக்கறுத்த சாத்தனார் என்ற பெயரில் அப்பகுதி பொதுமக்கள் வழிபட்டு வருகிறார்கள். 100 செ.மீ. உயரம் கொண்ட இந்த அய்யனார் சிலை செவ்வகவடிவ பீடத்தில் அமர்ந்த நிலையில் காணப்படுகிறது.
பீடத்தின் மீது தனது இடது காலை மடக்கி நிறுத்தி, முழங்காலின் மீது மணிக்கட்டை வைத்த நிலையிலும், வலது காலை பீடத்தின் மீது மடித்து வைத்து தொங்கவிட்ட நிலையிலும் காட்சி தருகிறார். இந்த ஆசனத்தை உத்குடிகாசனம் என்று சிற்பநூல் அடையாளம் காட்டுகிறது. முகத்தில் நாசி கரைந்துள்ளது. வலது கால் தொடையில் இருந்து பிளவுபட்டுள்ளது. இடது பாதமும், இருப்பில் வைத்த கடி அஸ்தமும் சிதைவடைந்துள்ளது.
சிரசில் தரிசடைகளை வட்டமாக மண்டலமாக வடிவமைத்துள்ளார்கள். இதை ஜடாமண்டலம் என்பர். கழுத்தில் கண்டிகையும், முத்துபதித்த ஆரமும் அலங்கரிக்கிறது. பூணூல், உதரபந்தம் மற்றம் வலது பக்கம் இருந்து இடது கால் வரை யோகப்பட்டை தரித்தும், இடையில் இடையாடையும், முழங்கைகளில் தோள்வாளை, கரங்களில் காப்புகளும் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன என்றார்.