உடலை கொண்டு செல்வதில் தகராறு; ஆம்புலன்ஸ் டிரைவர் மீது தாக்குதல்
திருச்சி உறையூர் சேர்ந்தவர் சாந்தகுமார்(வயது 35). இவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சாந்தகுமாரின் உடலை அவரது சொந்த ஊரான லால்குடிக்கு கொண்டு செல்வதற்காக இலவச ஆம்புலன்சில் ஏற்றினர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வெளியே வந்து கோர்ட்டு எம்.ஜி.ஆர்.சிலை அருகே வந்தபோது, அங்கு ஆட்டோவில் வந்த சிலர் சாந்தகுமாரின் உடலை உறையூருக்கு கொண்டு செல்ல வேண்டும் எனக்கூறி ஆம்புலன்ஸ் டிரைவர் சதீஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆத்திரம் அடைந்த அவர்கள், ஆம்புலன்ஸின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, சதீஷை தாக்கினர். இது பற்றி தகவல் அறிந்த செசன்ஸ் கோர்ட்டு போலீசார் அங்கு வந்து தாக்குதல் நடத்தியவர்களை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் கோர்ட்டு எம்.ஜி.ஆர்.சிலை அருகே சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.