தலையில் சில்வர் குடம் சிக்கிக் கொண்டதால் பரிதவித்த நாய்: போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்
திருச்சி, ஜூலை 8 மணப்பாறை அருகே தலையில் சில்வர் குடம் சிக்கிக் கொண்டதால் பரிதவித்த நாய் : தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வெள்ளைபூலாம்பட்டியில் சுற்றித் திரிந்த தெருநாய் ஒன்று அங்குள்ள ஒரு வீட்டில் இருந்த சில்வர் குடத்தில் தண்ணீர் குடிக்க முயன்ற போது தலை குடத்தில் சிக்கி கொண்டது. இதனால் அந்த நாய் அங்கும் இங்குமாக ஓடி பரிதவித்துக் கொண்டிருந்தது. இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் குடத்தை அகற்ற முயற்சி செய்தும் முடியாததால் இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நாயை பிடித்து சிறிது நேர போராட்டத்திற்கு பின் தலையில் சிக்கிய குடத்தை லாவகமாக அப்புறப்படுத்தி நாயை கட்டி வைத்திருந்த கயிறை அகற்றியதை அடுத்து தீயணைப்புத்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது வாலை ஆட்டி தீயணைப்பு வீரர்களை சுற்றிவந்த நாய் பின்னர் அங்கிருந்து ஓடியது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு மக்கள் நன்றி கூறினர்.