திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை
திருச்சி, ஆக.9 திருச்சி இந்திய நாட்டின் 77- ஆவது சுதந்திர நாள் விழா வருகிற 15-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் சுதந்திரதின கொண்டாட்டம் அமைதியாக நடக்கும் வகையில் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு ரயில்வே காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினார்கள். ஜங்சன் வழியாக சென்ற ரயில்களில் ஏறி சோதித்ததோடு, பயணிகளின் உடமைகளும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டன. ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகளின் உடமைகள் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டது. மேலும், ரயில் நிலைய நடைமேடைகள், பார்சல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தினர்.