ஆதி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

0 272
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இனாம் சமயபுரத்தில் உள்ள அருள்மிகு ஆதி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் எழுந்தருளுவதற்கு முன்பு மாரியம்மன் இனாம் சமயபுரத்தில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனால் அங்குள்ள கோவில் ஆதி மாரியம்மன் கோவில் என அழைக்கப்படுகிறது. இக் கோவிலில் பூச்சொரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி மாசி தேரோட்ட விழாவை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை கோவில் நிர்வாகத்தின் சார்பாக கோவில் மேலாளர் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பூத்தட்டுகளை சுமந்து தேரோடும் வீதி வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பூத்தட்டுகளுக்கு கோவில் குருக்கள் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்தார். இதையடுத்து ஆதி மாரியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு பூக்களை சாற்றி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பின்னர் சமயபுரம், மருதூர், மாகாளிகுடி, வி.துறையூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தட்டுகள் உள்ளிட்டவற்றில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டு வந்த பூக்கள் அம்மனுக்கு சாற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

Leave A Reply

Your email address will not be published.