அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வணங்குவதற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் தினமும் வந்து செல்வார்கள். அப்படி வரும் பக்தர்கள் தங்கத்தேர் இழுத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வந்தனர்.இந்நிலையில் தங்கத்தேர் ஓட்டுவது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு அறிவுறுத்தலின்படி, திருச்செந்தூர் கோவிலில் சில தினங்களுக்கு முன்பு தங்கத்தேர் ஓட்டப்பட்டது. அதைதொடர்ந்து, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் ஓட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதற்காக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருக்கும் தங்கத்தேரை சுத்தப்படுத்தி மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தங்கத் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தங்க தேரில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் கோவில் வெளிப்பிரகாரத்தில் தங்கரத உலா நடைபெறுகிறது.