உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பகுதிகளை தவிர்த்து, திருச்சி மாவட்டத்தில் பிற கிராம ஊராட்சிகளில் 2ந் தேதி கிராம சபைக்கூட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிராம ஊராட்சிகளின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை கருத்தில் கொண்டு தமிழகஅரசு நிர்வாகத்தில் இருந்த நடைமுறை சிக்கல்களை விலக்கி ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்காக தேவையான நிதி ஒதுக்கீடும் அரசினால் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் காந்தி ஜெயந்தி தினமான 2-ந் தேதி(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 1 மணிக்குள் திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் 2021 நடைபெறும் பகுதிகளை தவிர்த்து, பிற கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது.
நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கொரோனா தொற்று தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டபணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் உள்பட இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.