திருச்சி மாவட்டத்தில் இடி மின்னலுடன் விடிய விடிய பலத்த மழை – மின்னல் தாக்கி பசுமாடு உயிரிழப்பு; தாய் மகன் காயம்!
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் விடிய விடிய இடியுடன் கனமழை மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மாநகரை பொறுத்தவரை இரவு முதல் விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டியது. குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் மத்திய பேருந்து நிலையம் தில்லை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்நிலையில் மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்யத் தொடங்கிய நிலையில் நள்ளிரவு முதல் கனமழையாக மாறி காலை வரை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.
இந்நிலையில் மணப்பாறை அருகே வடக்கிப்பட்டியில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான பசுமாட்டை அவரது மனைவி ராமாயி கையில் பிடித்துகொள்ள அவரது மகன் சுரேஷ் பால்கறந்து கொண்டிருந்தபோது இடிதாக்கியதில் அதே இடத்தில் பசுமாடு கிழே விழுந்து துடிதுடித்து உயிரிழந்தது. சுரேஷ் தூக்கி வீசப்பட்டதில் அதிர்ச்சி அடைந்தார்.

இதுமட்டுமின்றி இடிதாக்கியதில் ராமசாமியின் மனைவி ராமாயி அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.