இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து பயிற்சி
கொரோனா தொற்று பரவல் காரணமாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை ஈடுசெய்யும் பொருட்டு ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்த பிறகு 1 மணி நேரம் முதல் 1½ மணிநேரம் வரை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த இல்லம் தேடி கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பணியில் மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டமானது திருச்சி மாவட்டம் உள்பட 12 மாவட்டங்களில் (திருச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கடலூர், தஞ்சை, திண்டுக்கல், ஈரோடு, நாகப்பட்டினம், மதுரை, நீலகிரி, கன்னியாக்குமரி) பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு மாநில அளவிலான பயிற்சி கடந்த 29, 30-ந் தேதிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்கத்தில் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பயிற்சி திருச்சி தெப்பக்குளம் பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.