மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி
திருச்சி, மார்ச் 28 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கபட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்றது. . ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் சீனிவாசன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். முதலில் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் கோவில் காளைகள் அழைத்து வரப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.. அப்போது சில காளைகள் களத்தில் தன்னை பிடிக்க வந்த வீரர்களை நெருங்க விடாமல் விரட்டி அடிக்கும் போது களமே ஆரவாரத்தால் அதிர்ந்தது. இதே போல் அடக்க மறுத்த காளைகளின் திமில்களை பிடித்து வீரர்கள் அடக்கி வெற்றியும் பெற்றனர். இதில் ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் இரண்டு காளைகளும் வீரர்களை அருகில் நெருங்கவிடாமல் களமாடி வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற காளை மற்றும் வீரர்களுக்கு கட்டில், அண்டா, டைனிங் டேபிள், குக்கர், மின்விசிறி உள்ளிட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் 700 காளைகள் மற்றும் 300 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.