தென்னை மரத்திலிருந்து விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு
திருச்சி , டிச , 26 திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த வாலிபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா மேல காரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (20). இவர் கூலி வேலை செய்து வந்தார். கடந்த டிசம்பர் 21-ம் தேதி ஏலூர் பட்டியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும் பணியில் பெரியசாமி ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக தென்னை மரத்திலிருந்து பெரியசாமி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயமும், இரண்டு கால்களிலும் எலும்பு முறிவும் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பெரியசாமியின் தாய் முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில், காட்டுப்புத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்