மாவட்டக்கண்காணிப்புக்குழு கூட்டத்தில் அமைச்சர் நேரு மீது எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
திருச்சி, ஜூன் 11 எங்கள் தொகுதிக்கு வந்த திட்டத்தை மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு மாற்றிய அமைச்சர் மீது வருத்தம் என்று அமைச்சர் கே.என்.நேரு மீது சட்டமன்ற உறுப்பினர் நேரடியாக குற்றம்சாட்டி பேசினார்.
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாவட்ட வளர்ச்சி குறித்து உரையாற்றினர்.
அப்போது ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி பேசுகையில்,
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட கண்ணுடையான்பட்டி சமுத்திர பாலம் கட்டுவதற்கு வந்த திட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு கொடுத்துவிட்டனர். எங்கள் அமைச்சர் கே.என்.நேரு மீது வருத்தம் வந்ததே இதன் காரணமாகத்தான். அந்தந்த தொகுதிக்கு என்ன வருகிறதோ அதை செய்யுங்கள். அடுத்தவர் சாப்பாட்டை எடுத்து மற்றவர்களுக்கு கொடுக்காதீர்கள். இந்த பாலம் வேறு தொகுதிக்கு சென்றதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று பேசினார்.