குழந்தை கடத்தல் : சிறுவன் உள்பட 4 பேர் கைது
திருச்சி, ஜூன் 11 மணப்பாறை அருகே நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடத்த முயற்சி பொதுமக்கள் விரட்டியதால் குழந்தையை விட்டுச் சென்ற கும்பல்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே உள்ள பாலப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சுதா. இந்த தம்பதியினர் 1 ½ வயது மகனுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் குழந்தையை தூக்கிக் கொண்டிருந்த வீட்டில் இருந்த இரண்டு செல்போன்கள், 5 ஆயிரம் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்ல முயன்றுள்ளனர். அப்பேர்து குழந்தையின் சப்தம் கேட்டு பெற்றோர் எழுந்து சப்தம் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து குழந்தையை கடத்திச் சென்ற கும்பலை விரட்டிய போது மர்ம நபர்கள் அங்குள்ள சுடுகாடு அருகே குழந்தையை விட்டு விட்டு குழந்தையிடம் இருந்த தங்க தாயித்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து திருடு போன செல்போனை வைத்து மர்ம நபர்களை பிடிக்கும் முயற்சியில் அந்த கிராம மக்கள் ஈடுபட்டு இன்று 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை பிடித்து பாலப்பட்டிக்கு அழைத்து வந்து தர்ம அடி கொடுத்தனர். இந்நிலையில் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் பிடிபட்ட 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்ததுள்ள நிலையில் நகைக்காக சிறுவன் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.