திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் சிதம்பரம் (66). இவர் அரியமங்கலம் லெஷ்மிபுரம் முதல் குறுக்குத் தெருவில் காளான் விதை தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் கடந்த 9ம் தேதி இரவு தனது அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை வந்த போது அலுவலகத்தின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த எலக்ட்ரானிக்ஸ் எடை மெஷின், காப்பர் ஒயர்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.
இது சம்பந்தமாக அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான கொள்ளையர்களின் முகத்தை வைத்து மர்ம நபர்களை தேடி வந்த நிலையில் அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்த நாகூர் ஹனிபா(21), அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.