திருச்சி மேலப்புலிவார்டு ரோட்டில் உள்ள அபிராமி எலக்ட்ரிகல்ஸ், ராசி பப்ளிகேஷன், சுமதி பப்ளிகேஷன் ஆகிய புக் ஸ்டால் மற்றும் சரவணா டிரேடர்ஸ் ஆகிய 4 கடைகளையும் திறப்பதற்காக கடை ஊழியர்கள் வந்தனர். அப்போது அந்த கடைகளின் முன்பக்க ஷட்டர்களின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசாருக்கு கடை ஊழியர்கள் தகவல் அளித்தனர். அங்கு வந்த குற்றப்பிரிவு போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ரூ.2,400 மட்டுமே திருட்டு போனது தெரியவந்தது. திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் எதிரே 4 கடைகளும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் திருடர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்தனர். அதில், 2 திருடர்கள் பூட்டை உடைப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த பதிவை வைத்து திருடர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.