மணப்பாறையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
திருச்சி, மார்ச் 31 மணப்பாறையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை. ஒருவரை ஒருவர் கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.
இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று தான் நோன்பு. ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பிருந்து ரமலான் தினத்தில் சிறப்பு தொழுகை நடத்தி நிறைவு செய்வார்கள். தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதன்படி திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள பாத்திமா மலை ஈத்கா திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். பாலஸ்தீன மக்களுக்கும், நல்ல மழை பெய்யவும், மக்கள் சுபிட்சமாக வாழவும் சிறப்பு பிராத்தனை செய்யப்பட்டது. புத்தாடை அணிந்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்ட அவர்கள் பின்னர் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து தங்களின் அன்பை பரிமாறிக் கொண்டனர்.
இதே போல் வையம்பட்டி, புத்தானத்தம், இளங்காகுறிச்சி, துவரங்குறிச்சி, வளநாடு, மகாளிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு இடங்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.