திருச்சியில் ரமலான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள்
ரமலான் பண்டிகை – திருச்சி மரக்கடை அரசு சையது முர்துஷா மாதிரி பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ஈகைத்திருநாளான ரமலான் பண்டிகை இந்தியா முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இஸ்லாமிய பெருமக்கள் நேற்று மாலை பிறை தெரிந்த உடன் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி வாழ்த்துக்களைப் பரிமாறி கொண்டனர்.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடந்த ஒரு மாத காலமாக நோன்பை கடைப்பிடித்தனர். புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் நோன்பை கடைபிடித்த இஸ்லாமியர்கள், அடுத்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதுடன் ஈகைப் பெருநாளை கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.
மேலும் புத்தாடை அணிந்து உற்றார், உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசு சையது முர்துஷா மாதிரி பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக 500 க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக மாநில பொருளாளர் சபியுல்லாகான், நிர்வாகிகள் ராஜாமுகமது, அஷ்ரப்அலி, காஜாமொய்தீன் மற்றும் மாமன்ற உறுப்பினர் பைஸ்அகமது உட்பட 500 க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். திருச்சியில் அனைத்து மசூதிகள் மற்றும் அரபி கல்லூரி ஒத்தக்கடை ஈத்கா மைதானம் மற்றும் பொன்மலைபட்டி ஜெய்லானியா ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது
பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.