கார் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி : 4 பேர் காயம்
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ சாலையில் கார் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி,4 பேர் காயம்.திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி.
திருவண்ணாமலை மாவட்டம் தானியப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் அருள்முருகன். இவர்கள் குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்று விட்டு பின்னர் திருவண்ணாமலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை அருள்முருகன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். காரில் இரண்டு சிறுவர்கள், இரண்டு ஆண்கள் ஒரு பெண் என 5 பேர் பயணம் செய்துள்ளனர். அதேபோல் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலையில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் பகுதியில் உள்ள பெருவளை வாய்க்கால் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற கார் மீது பின்னால் வந்த அரசு விரைவு பேருந்து மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்கால் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த குமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
காரில் பயணம் செய்த சுமதி என்ற பெண் படுகாயம் அடைந்தார்.மேலும் இரண்டு சிறுவர்கள் காரை ஓட்டி வந்த அருள் முருகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து காயம் பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி மஹாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.