மணப்பாறையை அடுத்த வீரப்பூர் பகுதியில் திருசெங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது காரை நிறுத்தி வைத்திருந்தார். அந்த காரின் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ.5,100 மற்றும் ஏ.டி.எம்.கார்டு, பான் கார்டு, ஆதார் மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதேபோல கோவை கருமாத்தான்பட்டி புதூரைச் சேர்ந்த ஒருவர் படுகளம் பகுதியில் தனது காரை நிறுத்தி வைத்திருந்தார். அந்த காரின் கண்ணாடியை உடைத்து ரூ.5 ஆயிரம் மற்றும் ஆதார் கார்டு, ரேசன் கார்டு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மேலும், மணப்பாறைபட்டி காய்கனி மார்க்கெட் அருகே போலீஸ் லைன் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து நடைபெறும் திருட்டு குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், திருட்டு நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்றால் மணப்பாறை போலீசார் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் இந்த திருட்டு சம்பவத்தை கட்டுப்படுத்த முடியும் என்றனர்.