தா.பேட்டையில் மலைக்கோட்டை மகாமாரியம்மனுக்கு சீர்வரிசை
திருச்சி, பிப்.2 திருச்சி மாவட்டம், தா.பேட்டை நெசவாளர் காலனியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை மகா மாரியம்மன் கோவிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தைப்பூச நன்னாளையொட்டி, மாரியம்மனுக்கு அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கோவில் பிரகாரத்தில் வீற்றுள்ள விநாயகர், முருகப்பெருமான், கருப்பண்ணசாமி மற்றும் மதுரை வீரன் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் காட்டப்பட்டன. மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, அப்பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கிளி பெருமாள் கோவிலில் இருந்து மாரியம்மனுக்குப் பட்டு வஸ்திரம், பூக்கள், வளையல் மற்றும் பழங்கள் அடங்கிய சீர்வரிசைத் தட்டுகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்னர், இந்தச் சீர்வரிசைத் தட்டுகள் சுவாமி முன்பு வைக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதற்குப் பதிலாக , மலைக்கோட்டை மகா மாரியம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் கிளி பெருமாளுக்குப் பொங்கல், நீர் மோர், பானகம், அதிரசம், முறுக்கு, தயிர் சாதம் உள்ளிட்ட பலகாரங்கள் (பச்சனங்கள்) சீராக வழங்கப்பட்டன.
இந்த விழாவில் தா.பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.