திருச்சி சீனிவாசா நகர் கடவுள் பூங்கா பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோகிலா(37). சம்பவத்தன்று காலை கோகிலா கடைக்கு செல்வதற்காக தனது ஸ்கூட்டரில் சீனிவாசாநகர் மெயின் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த திவாகரன் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து கோகிலா மீது மோதினார். இதில் கோகிலா நிலைதடுமாறி சாலை நடுவே விழுந்தார். இதனால் கோகிலாவுக்கும் அந்த வாலிபருக்கு தகராறு ஏற்பட்டது. அருகில் உள்ளவர் கோகிலாவுக்கு ஆதரவாக பேசியதால் திவாகரன் அங்கிருந்து சென்று விட்டார்.
இதனை தொடர்ந்து திவாகரன் பழிக்கு பழி தீர்க்க கோகிலாவின் வீட்டிற்கு அரிவாளுடன் சென்று அவரது ஸ்கூட்டரை வெட்டினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீட்டிற்குள் வீசினார். இதில் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு வெளியே வந்தனர்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் திவாகரனை விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.