சமயபுரத்தில் உள்ள லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை; 20 பேர் சிக்கினர்
சமீபகாலமாக தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளைகள் அதிகரித்து வருகின்றன. இதில் பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை ரவுடிகள் கையாண்டு வருகின்றனர். இதை தடுக்கும் வகையில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தமிழக டிஜிபி கத்தி, பட்டாகத்தி, அரிவாள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வோர் அவற்றை வாங்க வருபவர்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பெற வேண்டும் என்றும், விற்பனை செய்பவர்களைப் போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளார்.
இந்நிலையில் திருச்சி போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவின்படி, டிஐஜி சரவண சுந்தர், திருச்சி எஸ்.பி. மூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில், லால்குடி டி.எஸ்.பி. சீதாராமன் தலைமையில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சமயபுரத்தில் உள்ள லாட்ஜ்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
வெளியூரில் இருந்து சட்டவிரோதமாக யாரேனும் தங்கி உள்ளனரா? அவர்கள் ஆயுதங்கள் வைத்து உள்ளார்களா என்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சந்தேகப்படும்படி லாட்ஜ்களில் தங்கியிருந்த 20 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து சமயபுரம் நால்ரோடு, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் சோதனை செய்தனர்.