எமனாக வந்த எலிபேஸ்ட்..! தோல்வி பயத்தால் முசிறி மாணவி தற்கொலை..!
ஏப்ரல்.07, திருச்சி மாவட்டம் முசிறியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதிய மாணவி வர்ஷா (20), தேர்வில் தோற்று விடுவோமோ என்ற பயத்தில் வீட்டிலிருந்த எலிபேஸ்ட்டை தின்று தற்கொலை செய்துள்ளார்.
மாணவி வர்ஷா (20) கடந்த 2020-ம் ஆண்டு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இந்தநிலையில் இந்த ஆண்டு வர்ஷா தனது வீட்டில் இருந்தபடியே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு படித்து தனித்தேர்வராக தேர்வு எழுதியுள்ளார். தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வீட்டிலிருந்த மாணவி வர்ஷாவிற்கு தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
தோல்வி பயத்தில் மனமுடைந்த மாணவி கடந்த 4-ம்தேதி வீட்டில் எலி பேஸ்ட் விஷத்தை தின்று, மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்ட வர்ஷாவின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வர்ஷாவிற்கு அங்குள்ள மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி நேற்று மாணவி வர்ஷா இறந்து போனார். தன்னுடைய மகள் இறந்து போன சம்பவம் குறித்து, அவரின் தந்தையான பாலசுப்ரமணியன் முசிறி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இது குறித்து முசிறி போலீசார் விசாரணை மேற்கொண்டிருக்கக் கூடிய நிலையில், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.