மண்டல அளவிலான கருத்தரங்கம்
திருச்சி, மார்ச் 27 சமுதாய பொறுப்புணர்வு நிதி மற்றும் சமுதாய சேவை நிறுவனங்களை ஒருங்கிணைத்து வளமிகு வட்டார திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநில திட்டக்குழு உறுப்பினர் கே.தீனபந்து (ஓய்வு) ஆகியோர் தலைமையில் 10 மாவட்ட அலுவலர்கள், சமூக நல அமைப்புகள் மற்றும் சமூகப்பொறுப்பு நிதி வழங்கும் பெரு நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் மண்டல அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
மாநில திட்டக்குழுவின் ஆலோசனைப்படி சமுதாய பொறுப்புணர்வு நிதி மற்றும் சமுதாய சேவை நிறுவனங்களை ஒருங்கிணைத்து வளமிகு வட்டார திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநில திட்டக்குழு உறுப்பினர் கே.தீனபந்து(ஓய்வு) ஆகியோர் தலைமையில் மாநில திட்டக்குழு குழுமத்தலைவர்எஸ்.செல்வக்குமார் முன்னிலையில் இன்று திருச்சி தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் திருச்சி, அரியலூர், திண்டுக்கல், கரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்கள் பங்கேற்ற மண்டல அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டம் (மலைப்பகுதிகளை உள்ளடக்கிய முன்னுரிமை வட்டாரங்கள்). அரசுத்திட்டங்களை ஒருங்கிணைப்பதன் வாயிலாக, இலக்குகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள், சமூக பொருளாதார அளவுருக்களில் பின்தங்கிய வட்டாரங்களின் வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மாநிலத்திலுள்ள 388 வட்டாரங்களின் வளர்ச்சித் தேவைகளைக் சுட்டிக்காட்டும் 9 குறிகாட்டிகளின் வட்டார அளவிலான தரவுகளைப் பயன்படுத்தி, 50 பின்தங்கிய வட்டாரங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. இதில் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த மருங்காபுரி வட்டாரமும் ஒன்றாகும். சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, சமூகநலம், கல்வி, திறன்மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு, வேளாண்மை மற்றும் அதுசார்ந்த சேவைகள், பொருளாதார மேம்பாடு மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய 7 கருப்பொருள்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள 50 முக்கிய வளர்ச்சிக் குறிகாட்டிகள் மற்றும் 131 துணைக்குறிகாட்டிகள் ஆகியவற்றைக் கொண்டு, இத்திட்டத்தின் வளர்ச்சி கண்காணிக்கப்படுகிறது.
வளமிகு வட்டாரங்கள் வளர்ச்சித் திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கு ஏதுவாக ஒவ்வொரு வட்டாரத்திற்கெனவும் ஒரு வட்டார வளர்ச்சி உத்தி ஆவணமும் 2023-24 ஆம் ஆண்டு முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கென ஒரு வட்டார ஆண்டுத் திட்டமும் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் 50 பின்தங்கிய வட்டாரங்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்த அரசின் முன்னெடுப்போடு, சமூக நல அமைப்புகள் மற்றும் சமூகப்பொறுப்பு நிதி வழங்கும் பெரு நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்களிப்பின் இன்றியமையாமையைக் கருத்தில் கொண்டு, அதை ஈர்ப்பதற்காக இக்கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சுரேஷ், மாவட்ட திட்டமிடல் அலுவலர் பொ.சுரேஷ், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.