திருச்சி விமான நிலைய புதிய முனையத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்த கோரிக்கை
திருச்சி, ஜூன் 27 திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் ரூ. 1, 112 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் தேதி நடைபெற்றது. இதனிடையே பணிகள் முழுமை அடையாததால் விமான நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
புதிய விமான முனையம் சர்வதேச அளவில் மிக சிறப்பாக அமைக்கபட்டுள்ளது. பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் விமான நிலையம் சாலையிலிருந்து சற்று தொலைவில் உள்ளதால் புதிய முனையத்திற்கு அரசு பேருந்துகளை இயக்க வேண்டுமென போக்குவரத்து துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது புதிய முனையத்தில் இருந்து, முக்கிய சாலைக்கு வர 1. 5 கி. மீட்டர் தொலைவு உள்ளதால், அதற்காக போக்குவரத்து வசதி சரிவர செய்யப்படவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது மட்டுமின்றி திருச்சி விமான நிலையத்திற்கு எல்லா பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதிகளை கொண்டு வர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பன்னாட்டு விமான நிலையமாக செயல்பட்டு வரும் திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து பயணிகள் வருகின்றனர். திருச்சி மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.