ஒன்றிய நூற்றாண்டு விழாவை ‘முதல்வர் மு.க.ஸ்டாலின்’ தலைமையில் நடத்த தீர்மானம்!
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நூற்றாண்டு காலம் பாரம்பரியமிக்க சங்கங்களில் முதன்மை சங்கமான 147 சங்கங்களை இணைத்து திகழ்ந்து வரும் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றியத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே தனியார் மஹாலில் நடந்தது. மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் பதவி ஏற்பு விழா மாநிலத் தலைவர் சண்முகராஜன் தலைமையில்
நடைபெற்றது. இதில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொமுச மாநில பொதுச் செயலாளரும், எம்பியுமான சண்முகம், புதிதாக பதவியேற்றுள்ள திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், எஸ்.ஆர்.எம்.யு ரயில்வே தொழிற்சங்கத்தின் தலைவர் ராஜா ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். இதில் 2021ம் ஆண்டு நடைபெற்ற
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தும், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் நூற்றாண்டு விழாவினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்து வெகு சிறப்பாக நடத்துவது எனவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக முதல்வர் கொண்டுவரவும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள்
ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இவ்விழாவில் திருச்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சுருளிராஜ் முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் அருள்ராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறை பொதுப்பணித்துறை நூலகத்துறை அமைச்சுப்பணியாளர் சங்கம் கல்வித்துறை போன்ற அனைத்து சங்கத்தின் மாநில மாவட்ட மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.