சப்தரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்ட விழா
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்ட விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் 5 தேர்களை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
திருத்துவத்துறை எனும் லால்குடியில் அமைந்துள்ள அருள்மிகு சப்தரீசுவரர் கோயில், சப்தரிஷிகளுக்கும் முக்தி தந்த தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், இந்தாண்டுக்கான பங்குனி தேர்த்திருவிழா மார்ச் 16-ம் தேதி விக்னேஸ்வரா பூஜையுடன் தேர்க்கால் ஊன்றும் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 26 ந்தேதி தேரோட்ட கொடியேற்ற விழா நடைபெற்றது. விழாவில் தினமும் சுவாமி அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் இன்று காலையில் தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் சுவாமி எழுந்தருளினார்.இந்த
தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி ஆகிய தேரோடும் வீதிகளில் தேர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நித்யா,தக்கார் ரவிச்சந்திரன் மற்றும்,கோயில் குருக்கள்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.