புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காரைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(37). இவர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் பணி செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் வீரையன் பாளையம் ஹரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு 40 என்பவரிடம் வெளிநாட்டிற்கு தான் ஆட்களை அனுப்பி வைப்பதாகவும், தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் தெரிவிக்குமாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சுரேஷ்பாபு தனது நண்பர்களான ரவிச்சந்திரன் என்பவரிடமிருந்து ரூ.1,10,000, பால்ராஜ் என்பவரிடம் ரூ.80 ஆயிரம், அஜய் குமார் என்பவரிடம் ரூ.1 லட்சம் கொடுத்து துபாய்க்கு செல்வதற்கு ஏற்பாடு செய்யச் சொல்லி உள்ளார். இந்த நிலையில் மேற்கண்ட நபர்களுக்கு போலியான விசாக்களை வழங்கி முத்துக்குமார் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்துள்ளார்.
இதை அறிந்த சுரேஷ்பாபு தனது நண்பர்களான தென்காசி சொக்கம்பட்டியை சேர்ந்த பால்ராஜ்(28), கோவை ராஜவீதி சேர்ந்த லியோ(40) ஆகியோருடன் திருச்சி விமான நிலையம் வந்த சுரேஷ்பாபு வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற முத்துக்குமாரை தாக்கி காயப்படுத்தி உள்ளார். இதனைத்தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற அடிதடி தகராறு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி விமான நிலைய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏர்போர்ட் போலீசார் அவர்களை விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.