இலங்கையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்தவர் திருப்பி அனுப்பிவைப்பு
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் இருந்த காரணத்தினால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் சிறப்பு மீட்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தொற்று குறைந்த அளவில் இருக்கும் காரணத்தினால் வெளிநாடுகளிலிருந்து பல்வேறு விமானங்கள் தனது சேவையை துவங்குவதற்கு தயாராகி வருகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் முதல் வியாழக்கிழமை தோறும் இலங்கையில் இருந்து திருச்சிக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவையினை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கி வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சிக்கு வந்தது.
இந்த விமானத்தில் வந்த பயணிகளை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த தர்மவர்தனா (41) என்ற பயணி இலங்கை அரசால் தடை செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் இலங்கைக்கு அதே விமானத்தில் அவரை திருப்பி அனுப்பினர். இதனால் திருச்சி விமான நிலையம் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது