மலைக்கோட்டை கோவிலுக்குள் புகுந்த கழிவுநீர் : பக்தர்கள் அவதி
திருச்சி ஆக.7 திருச்சியின் அடையாளமாக விளங்கும் வரலாற்று சிறப்புமிக்க மலைக்கோட்டை கோவிலில் டிக்கெட் கவுண்டர், யானை நிற்கும் பகுதியில் சாக்கடை நீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி
திருச்சியின் அடையாளமாக விளங்குவது மலைக்கோட்டை. மலைக்கோட்டையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இது கோவிலாகவும் சுற்றுலா தளமாகவும் விளங்கி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் மலைக்கோட்டைக்கு வந்து செல்வார்கள் அதில் பெரும்பாலானோர் பக்தர்கள் தான் இருப்பார்கள்.
இந்த நிலையில் மலைக்கோட்டையின் அடிவாரத்தில் உள்ள குடிநீர் தொட்டியை சுத்தம் செய்துள்ளனர். சுத்தம் செய்த நீரை அருகில் உள்ள சாக்கடையில் ஊழியர்கள் விட்டுள்ளனர் அப்பொழுது எதிர்பாராத விதமாக சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. அதனால் சாக்கடை நீர் வெளியே செல்ல வழி இல்லாமல் மலைக்கோட்டை கோவில் அலுவலகம் அருகே உள்ள டிக்கெட் கவுண்டர், யானை நிற்கும் இடம், சுவாமிகளை வீதி உலா கொண்டு செல்லும் வாகனங்கள் வைத்துள்ள இடம், சாலையிலும் சாக்கடை கழிவு நீர் சூழ்ந்துள்ளது.
உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு சென்று வருபவர்கள் கீழே சாக்கடையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது இதனால் பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.