ஆடி முதல் வெள்ளி கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சமயபுரம் மாரியம்மன்: ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை யொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். முடிகாணிக்கை செய்தும், அக்னிச்சட்டி ஏந்தியும், குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து கோவிலை வலம் வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவானைக்காவல் : ஆடிவெள்ளியையொட்டி திருவானைக்காவல் கோவிலில் அதிகாலை 3 மணி அளவில் நடை திறக்கப்பட்டது. அதன் பின்னர் சிறு, சிறு பூஜைகால இடைவெளிக்கு பின்னர் தொடர்ந்து நள்ளிரவு வரை சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றன. அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
தொட்டியம் மதுரை காளியம்மன்: ஆடி முதல் வெள்ளிக்கிழமையையெட்டி தொட்டியம் மதுரை காளியம்மனுக்கு அஷ்டலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் தொட்டியம் திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜ நடைபெற்றது.
முசிறி-தா.பேட்டை: முசிறி கள்ளத்தெரு மகா மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால் தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி, அரிசி மாவு, திரவிய பொடி போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது., தொடர்ந்து வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து, மகாதீபாரதனை காட்டப்பட்டன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். தா.பேட்டை பிள்ளாதுரை பெரியமாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், உடைப்புவாய் கருப்பண்ணசாமி, மாரியம்மன், தேவானூர் ஸ்ரீ ராஜகாளியம்மன், கரிகாலி மகாமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வழிபாடுகள் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருளினார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும் செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.
உறையூர்: திருச்சி உறையூர் வெக்காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். திருச்சி கே.கே. நகர் இந்திரா நகர் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சீனிவாச பெருமாள், அலமேலு மங்கை சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.