திருச்சியில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி
திருச்சி,நவ.26 திருச்சியில் முத்தமிழ் சிலம்பம் டிரஸ்ட் மற்றும் சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்திய மாநில சிலம்பப் போட்டி.
முத்தமிழ் சிலம்பம் டிரஸ்ட் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்தும் “சிலம்பம் சமர் – 2025” மாநில அளவிலான சிலம்பப் போட்டி, திருச்சி உறையூர் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 8, 10, 12, 14, 18, 19 வயது வரை உள்ள மாணவ–மாணவிகள் பெருமளவில் பங்கேற்றனர். ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, குழு போட்டி, சுருள் வீச்சு, அலங்கார சிலம்பம், தொடு சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெற்றன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். சிறந்த திறனை வெளிப்படுத்திய மாணவ–மாணவிகள் கேடயங்களும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.பின்னர், சங்கத் தலைவர் மற்றும் சிலம்பாட்ட ஆசான் சரவணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் தற்போது உள்ள ‘தொடு முறை சிலம்பத்திற்கு’ பதிலாக,
2023 ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்தது போல — ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, சுருள் வீச்சு, அலங்கார சிலம்பம், மான் கொம்பு ஆகிய ஐந்து முறைகளையும் மீண்டும் சேர்க்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.
முதல்வர் கோப்பை போட்டியில் பணம் வழங்க வேண்டியதில்லை; சான்றிதழ் வழங்கப்படுவதே மாணவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.
சிலம்பக் கலையைப் பரப்பும் நோக்கில் நடைபெற்ற இந்த மாநில அளவிலான போட்டி, மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.