பள்ளி வாகனம் மோதியதில் மாணவி பலி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள வடுகர் பேட்டையில் தனியார் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 10 வயது பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
புள்ளம்பாடி அருகே வடுகர்பேட்டை வீரமாமுனிவர் நகரை சேர்ந்தவர் குமார். இவருடைய மகள் 10 வயதான கோபிகா.இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று மாணவியை பள்ளியில் விடுவதற்காக அவருடைய தந்தை மோட்டார் பைக்கில் ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வடுகர் பாளையம் சுரங்கப்பாதையிலிருந்து வெளியே வந்தபோது எதிர்த் திசையில் அரியலூர் மாவட்டம் செம்பியக்குடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த 46 வயதான சண்முகம் ஓட்டி வந்த தனியார் பள்ளி வாகனம் எதிர்பாராத விதமாக மோட்டார் பைக் மீது மோதியது. இதில் பள்ளி வாகனத்தில் பின் சக்கரத்தில் சிக்கிய கோபிகா தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த கள்ளக்குடி போலீசார் தனியார் பள்ளி ஓட்டுநர் சண்முகத்தை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.