நாகைநல்லூரில் ஏரியை ஆய்வு செய்த தலைமை பொறியாளர்..
தொட்டியம் அருகே நாகைநல்லூர் ஏரி அமைந்துள்ளது. விவசாய பாசனத்திற்கு
மிகுந்த உதவியாக இருக்கும் இந்த ஏரிக்கு தற்போது அண்மையில் பெய்த மழை காரணமாக தண்ணீர் வந்து கொண்டுள்ளது. ஏரியில் தண்ணீர் வழிந்து நிலையில் தற்போது காணப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதி விவசாயிகள் சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் நகையநல்லூர் ஏரிக்கு மழை வெள்ள காலங்களில் காவிரி ஆற்றில் செல்லும் உபரி நீரை கொண்டு வந்து தண்ணீர் நிரப்பினால் பாசன நிலங்களும் விவசாயிகளும் மிகுந்த பயன்பெறுவர் என முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனிடம் முறையிட்டிருந்தனர்.

இது குறித்து தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் சட்டசபையில் பேசியிருந்த நிலையில் தமிழக முதல்வரிடமும் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து சென்னை திட்ட உருவாக்க தலைமை பொறியாளர் பொன்ராஜ் , திருச்சி திட்ட வடிவமைப்பு கோட்ட பொறியாளர் அறிவழகன், உதவி கோட்ட பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோருடன் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனுடன் நாகைநல்லூர் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஏரிக்கு தண்ணீர் வரும் நீர் வழித்தடம் வெளியேறும் பகுதி மற்றும் காவிரி ஆற்றில் இருந்து உபரி நீரை கொண்டு வருவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. திட்ட உருவாக்க தலைமை பொறியாளர் ஏரியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆய்வின்போது ஒன்றிய செயலாளர் திருஞானம், தங்கவேல், வழக்கறிஞர் ராஜரத்தினம் மற்றும் ஏரி நீர் பாசன சங்க நிர்வாகிகள் விவசாயிகள் மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.