திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 50). இவரது மகன் வீரமணி என்கிற வாலு (27). இவருக்கும், லால்குடி மணக்கால் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவரும் உறவினர்கள். இந்தநிலையில் கடந்த மாதம் 17ம் தேதி வீரமணிக்கும், சிறுமிக்கும் குடும்பத்தார் திருமணம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் திருமண வயதை எட்டாத சிறுமிக்கு திருமணம் நடந்த தகவல் தெரிந்து, திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் விசாரணை மேற்கொண்டு அது குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்தவேத வல்லி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் எடமலைபட்டி புதூரில் உள்ள வீரமணி வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் ஆனந்த வேதவல்லி தலைமையிலான போலீசார் சென்றனர். சிறுமியின் திருமணத்திற்கு உடந்தையாக இருந்ததாக வீரமணியின் தந்தை லட்சுமணனை போலீசார் கைது செய்தனர்.
சிறுமிக்கு தாலிகட்டிய வாலிபர் வீரமணி, போலீசார் தேடுவதை அறிந்து தப்பி ஓடியது தெரிய வந்தது. சிறுமி மீட்கப்பட்டு பெண்கள் காப்பகத்தில் அடைக்கப்பட்டார்.