திருச்சி மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த செல்வம்(வயது 47) என்பவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து துவாக்குடி வரை தனியார் பேருந்தை இயக்கி வருகிறார். இவர் திருச்சி மாவட்ட தனியார் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சங்க தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் வழக்கம் போல இன்று பேருந்தை இயக்கி அவர் திருச்சி மெயின்கார்டு கேட் பகுதியில் தனக்கு முன்னிருந்த ஆட்டோவை கடந்து செல்ல முற்பட்டார். அப்போது அவருக்கும், ஆட்டோ ஓட்டுனருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் அப்பகுதியில் இருந்த போக்குவரத்து காவலர் முனீஸ்வரன் இருவரையும் சமாதானப்படுத்தும் போது தனியார் பேருந்து ஓட்டுனருக்கும், காவலருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த போக்குவரத்து காவலர் தனியார் பேருந்து ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து வந்த தனியார் பேருந்துகளின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் போக்குவரத்து காவலர் முனீஸ்வரனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் கோட்டை நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சமாதானப்படுத்தி அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.