ஊராட்சி மன்ற தலைவர் மீது கிராமமக்கள் போலீசில் புகார்
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்து உள்ள முசிறி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கரட்டாம்பட்டி ஊராட்சியில் தலைவராக இருப்பவர் நிர்மலாதேவி. கடந்த சில மாதங்களாக ஊராட்சி மன்ற தலைவர் மீது சரியான முறையில் பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்லை என்றும், வளர்ச்சி பணிகளை செய்வதில்லை என்றும், கிராம சபை கூட்டம் முறையாக நடத்த படவில்லை என்று கூறி கரட்டாம்பட்டி ஊராட்சி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா 100 நாள் வேலை செய்யும் இடத்தை பார்வையிட்ட தாகவும், அப்போது பணி கால்நடை மருத்துவமனை அருகில் நடைபெற்றதாகவும், அந்தப் பகுதியில் அருவருக்கத்தக்க வகையில் இடம் இருந்ததால் அந்த இடத்தில் பணி செய்ய முடியாது என்று கூறியதாகவும், அப்போது ஊராட்சி மன்ற தலைவர் நீங்கள் இங்கு தான் வேலை செய்தாக வேண்டும் என்றும் பிரச்சனை செய்பவர்களை அறைந்துவிடுவதாக கூறியதாகக் கூறப்படுகிறது.
இதனால் சம்பந்தப்பட்ட பெண்களான பணியில் ஈடுபட்டிருந்த பிரபா, ஜெயந்தி, கீதா, ருக்குமணி, காந்தாமணி, பாலாமணி ஆகியோர் புலிவலம் போலீஸ் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா தங்களையும், தங்களுடன் உடன் பணிபுரிந்தவர்களையும் அறைந்து விடுவேன் என்று மிரட்டியதாக புகார் அளித்தனர். 6 பேர் புகாரின் மீது புலிவலம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். ஊராட்சி மன்ற தலைவர் மீது பொதுமக்கள் புகார் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.