பலத்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
திருச்சி, நவ. 14 திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பச்சபெருமாள்பட்டி ஊராட்சி ப.கல்லாங்குத்து கிராமம், மாரியம்மன் கோயில் அருகே உள்ள அம்பலக்காரர் தெருவில் வசிப்பவர்கள் சதாசிவம் (75), வாசுதேவன் (73) சகோதர்கள். சுமார் 100 அடி நீளம் 55 அடி அகலம் கொண்ட ஓடுகளாலான வீட்டில் இருவரும் குடும்பத்துடன் வசித்து வந்தனர். நேற்று முதல் பெய்து வரும் தொடர் கனமழையால் பழங்கால சுவற்றில் சற்று விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில். சதாசிவத்தின் மனைவி பாப்பா (70), வாசுதேவனின் மனைவி திலகவதி (63) ஆகிய இருவரும் சமையலில் ஈடுபட்டிருந்த பொழுது 15 அடி உயரமும் சுமார் 100 அடி நீளமும் கொண்ட சுவர் வெளிப்பக்கமாக இடிந்து விழுந்தது. இதில் இருவரும், சத்தம் கேட்டு வெளியே ஓடிவந்ததால் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்துறை ஆய்வாளர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.