வீட்டிலிருந்த பணம், நகை திருட்டு
திருச்சி,ஜூலை 18 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறையில் வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்த போது உள்ளே புகுந்த மர்ம நபர்கள் நகை பணத்தை திருடி சென்றனர்.
லால்குடி அருகே மாந்துறை பிரியா ஹோம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அஜீஸ் (30). இவர் தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது காற்றோட்ட வசதிக்காக கதவை திறந்து வைத்துள்ளனர். இந்நிலையில் 16 ம் தேதி அதிகாலை ஒரு மணியிலிருந்து 5 மணிக்குள் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்த ஒன்றரை பவுன் நகை, 50 கிராம் வெள்ளி மற்றும் ரூ. 2500 பணம் ஆகியவற்றை திருடி விட்டு தப்பிச் சென்றனர். காலையில் எழுந்து பார்த்த போது நகை பணம் திருட்டுப் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த முகமது அஜீஸ் லால்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நகை பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.