திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன்தொடக்கம்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் உள்ள புண்டரீகாட்ச பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை கிராமத்தில் புண்டரீகாட்ச பெருமாள் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான இங்கு ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பெருமாள், தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அனந்தராயர் மண்டபத்தை வந்தடைந்தனர். அதைத்தொடர்ந்து கருடன் படம் வரையப்பட்ட கொடி வீதிஉலாவாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து பெருமாள் தாயார் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர், கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பட்டயதாரர்கள், பொதுமக்கள் முன்னிலையில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 13-ந்தேதி வழிநடை உபயங்கள் கண்டருளி கண்ணாடி அறை சென்றடைகிறார். அன்று இரவு கருடவாகனத்திலும், அடுத்தடுத்த நாட்களில் காலையில் ஹம்சவாகனம், இரவில் சேஷவாகனம், சிம்மவாகனம், யானைவாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி எழுந்தருளுகிறார். 16-ந்தேதி நெல்அளவு கண்டருளும் நிகழ்ச்சியும் 17-ந் தேதி குதிரைவாகனத்தில் சுவாமி எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 18-ந்தேதி தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.