காசிவிளங்கி மீன்மார்க்கெட்டில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
திருச்சி ஏப்.5 திருச்சி, உறையூர்,குழுமணி சாலையில் காசி விளங்கி மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு மீன் மொத்த, சில்லறை வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும்,வாடிக்கையாளர் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் வருவது வழக்கம். அவ்வாறு வரும் கன ரக வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.மார்க்கெட்டுக்கு வெளியே தடுப்பு சுவர் ஒரம் நிறுத்தப்படும் வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
ஆனால் தற்போது மீன் மார்க்கெட், சாலையோரம் நிறுத்தப்படும் வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணமாக ரூபாய் 10 வசூலிக்கப்படுகிறது. அதேபோன்று
லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கும் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனை கண்டித்தும் நுழைவு கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வியாபாரிகள் கடைகளை திறக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தால் சுமார் பல லட்சம் ரூபாய் வியாபாரம் பாதிக்கப்பட்டது. இதனால் இன்று மீன் வாங்க வந்த பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.