மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் (சுவாச் சர்வேக்சன்) ஆண்டுதோறும் தூய்மை நகரங்களை தேர்வு செய்து, அதனை பட்டியலிட்டு அறிவித்து வருகிறது. நகரங்களின் சுகாதாரம், வளர்ச்சி, மக்களிடம் கருத்துக்கேட்பு உள்பட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து, இந்த சர்வே எடுக்கப்படுகிறது. இந்தாண்டு மொத்தம் 6 ஆயிரம் மதிப்பெண்களுக்கு அதிகபட்ச மதிப்பெண் பெறும் உள்ளாட்சிகளை வரிசைப்படுத்தி தூய்மை நகரங்களுக்கான பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்தநிலையில் 10 லட்சம் மக்கள் தொகை்குட்பட்ட 372 நகரங்கள் பட்டியலில் திருச்சி மாநகராட்சி 121-வது இடம் பிடித்துள்ளது. மொத்தம் 6 ஆயிரம் மதிப்பெண்களில் திருச்சி மாநகரம் 3050 மதிப்பெண்களை பெற்றுள்ளது. இதே கடந்த ஆண்டு திருச்சி மாநகராட்சி 102-வது இடத்தை பிடித்து இருந்தது. தற்போது மேலும் சில இடங்கள் பின்னோக்கி சென்று 121-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு தூய்மை நகரங்கள் பட்டியலில் திருச்சி 2-வது இடத்தை பிடித்தது. தற்போது ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக பின்னோக்கி சென்று கொண்டு இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.