அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய திருச்சி வாலிபர் கைது!
திருச்சி துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (45). இவர் அரசு பஸ் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று துப்பாக்கி தொழிற்சாலையில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை செல்லும் பேருந்தில் நடத்துனராக இருந்தபோது, அரியமங்கலம் மேம்பாலம் அருகே வந்தபோது அம்பிகாபுரத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதாகத் தெரிகிறது.
அவரை நடத்துனர் பஸ்சின் மேலே ஏறி வரும்படி கூறியதால் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சீனிவாசன் ராமசாமியை தாக்கினார். இது குறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர்.